விதைகளின் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விதைகளின் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஏப்ரல், 2010

விதைகளின் கதை

நிகோலாய் வாவிலோவ்நுண்ணுயிர்ப் பண்பாடடு ஆராய்ச்சிக்கான மதிப்பு, பொறுப்பு ஆகியவற்றைப் பொறுத்து  ஷாட்ஸ் வஞ்சிக்கப்பட்டாலும், அவர் ஈடுபட்ட ஆராய்ச்சி தடையுறவில்லை. பல்லுயிர்ப் பெருக்கப் பண்பாட்டில் (பயோடைவர்சிட்டி) நுண்ணுயிரிகளும் அடக்கம்தானே! உயிரான வேளாண்மைக்கு உயிரிகளே உயிர் தருகின்றன. சில கணங்களில் வாழ்ந்து சில கணங்களில் மடிந்து மீண்டும் மீண்டும் பல்கிப் பெருகி வாழும் நுண்ணுயிரிகளை மைக்ரோஸ்கோப்பில்தான் பார்க்க முடியும். அது பாக்டீரியாக்களாகவோ, காளான்களாகவோ, பாசிகளாகவோ இருக்கலாம். ஒரு பிடிமண்ணில் ஒரு கோடி நுண்ணுயிரிகள் வாழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு பாதாள அறையில் அடைந்து கொண்டு, மிகவும் துணிச்சலுடன் காசநோய்க் கிருமிகளுடன் வசித்துக் கொண்டு, அதைக் கொல்லும் காளான் நுண்ணுயிரிகளான ஸ்ட்ரப்டோமைசீனைக் கண்டு பிடித்த ஷாட்ஸின் பெயரை என்னிடமுள்ள என்சைக்ளோபீடியா-கலைக்களஞ்சியத்தில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் ஸ்ட்ரப்டோமைசீனுக்கு மட்டும் பொருள் விளக்கம் காணப்பட்டது. நோபல் பரிசை இவருடைய வழிகாட்டி தட்டிப்பறித்தாரோ, மருத்துவ நிறுவனங்களுக்கு விற்றாரோ எதுவாயினும் அவர் பெயரும் இல்லை. ஸ்ட்ரப்டோமைசீன் தானாகவோ பூமியில் விளைந்ததாகக் கலைக்களஞ்சியம் கூறகிறது. நுண்ணுயிர்ப்பண்பாடு வஞ்சிக்கப்பட்டது போலவே பேருயிர், தாவரஉயிர்ப் பண்பாட்டை வளர்த்த வாவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) வஞ்சிக்கப்படவில்லை, தண்டிக்கப்பட்டார்.
இன்றைய உயிர்ச்சூழல் உலகில் நிகோலாய் ஐ. வாவிலோவே பல்லுயிர்ப்பெருக்கத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். ஆனால் நிஜவாழ்வில் கலிலியோவுக்கு நிகழ்ந்த அதே சோக முடிவு இருவருக்கும் நிகழ்ந்தது. இவர் கண்டுபிடிப்பு கலிலியோ, கொலம்பஸ் கண்டுபிடிப்புகளுக்குச் சற்றும் சளைத்தது அல்ல. ஆனால் கொலம்பஸ் பெற்ற அங்கீகாரத்தை இவர் பெறவில்லை.
உலகில் எல்லா நிலப்பகுதிகளிலும் உணவுத்தாவரங்கள் பரவியதின் காரணம் விதைகளைச் சேகரித்துப் பயணங்கள் மூலம் அடுத்த நாடுகளுக்குக் கொண்டு சென்றதே ஆகும். கொலம்பசும் அவருடன் வந்த மாலுமிகளும் தென்னமெரிக்காவில் விளைந்த உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, மக்காச்சோளம், தக்காளி, மிளகாய், கத்தரி, பீன்ஸ் ஆகியவற்றை முதலில் ஐரோப்பாவிற்கும் அதன்பின்னர், ஆசியாவுக்கும் கொண்டு சென்றனர். எனினும் கத்தரிக்காய், மக்காச்சோளம் பாரம்பரியமான இந்தியப்பயிர்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் அடையாளப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் குடியேறிய கருப்பின மக்கள் ஆப்பிரிக்காவில் தாங்கள் விளைவித்த புஞ்சை தானியங்களையும், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்ற கிழங்குவகைகளையும் கூடவே கொண்டு சென்றனர். இந்தியாவிலிருந்து புத்தமதத் துறவிகள் நெல்லைச் சுமந்து சென்று கிழக்காசிய நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர். கத்தரிக்காய், மக்காச்சோளத்தைவிட, காக்காச்சோளம் என்று சொல்லப்படும் சோளம் மற்றும் கரும்பு தானியத்தின் தாய்நாடு இந்தியா என்றாலும், ஆப்பிரிக்க அறிமுகம் என்று ஒரு கருத்தும் உள்ளது. ஆப்பிரிக்காவில் மைலோ-MILO-என்று சொல்லப்படும் தானியம் நம் ஊர் செஞ்சோளம். சோளத்தில் மட்டும் தமிழ்நாட்டில் ஏராளமான ரகங்கள் இருந்தன. ஆந்திரப்பிரதேசத்திலும் அவ்வாறே. எனினும் கம்பு பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உண்டு. சோளம் பற்றிய குறிப்பு உள்ளதாகத் தெரியவில்லை. ஒருக்கால் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மைலோ இங்கு செஞ்சோளமாக அழைக்கப்பட்டிருக்கலாம். புஞ்சைதானியங்கள் அதிகம் விளையும் மகாராஷ்டிர மாநிலத்தில் சோள சாகுபடி குறைவு. இதர சிறுதானிய சாகுபடி - குறிப்பாக சாமை, வரகு, பனிவரகு,தினை எல்லாம் அதிகம் உண்டு. இனிவிட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
வாவிலோவின் சிறப்பு எவையெனில் :
1. உணவுப்பயிர்களின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்பு.
2. பூர்வ இனத்தோற்றப் பயிர்களின் விதை சேகரிப்பு.
3. பூர்வ இனவகை (Land Races)களைக் கோடிட்டு உருவாக்கிய புவியியல் அட்டவணை.
4. மரபியலில் மென்டலிய (Mendel) விதிகளை(1865) சீராக்கியவர். அதாவது மென்டல் விதிப்படி பாரம்பர்யம் ஒழுங்குமுறையுடன் தலைமுறையை உருவாக்குகிறது. வாவிலோவ் அதை மறுத்து உயிர்மங்களின் பாரம்பர்ய மூலக்கூறு ஒழுங்கற்றுச் செயல்படுகிறது என்றார். ஆங்கிலத்தில் கூறுவதானால் இவர் செய்தது delineation of the Law of Homologous Series in Genetic Variation ஆகும்.[1]
1920, 1930 பதிற்றாண்டுகளில் ஏராளமான பயிரின் ஆய்வுகளை மேற்கொள்ள  இவரும் கொலம்பஸைப்போல் உலகை வலம் வந்தார். உணவுத்தாவரங்களின் பூர்வ இனத்தை, உணவுத் தோற்றமையங்களை அடையாளப்படுத்தினார். இன்றைய ருஷியாவிலும், ருஷியாவுக்கு வெளியே உலகம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்களில் சுமார் 29000 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆதர்சமாக இருந்தவர். உலகில் உள்ள 12 உணவுத்தோற்றமையங்களை இவர் அடையாளப்படுத்தியதால் இந்த சாதனைக்காக வாவிலோவை ”பல்லுயிர்ப்பெருக்கத்தின் தந்தை” என்ற மரியாதை, இவர் மறைவுக்குப்பின் கிட்டிய பரிசு.
1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு தாவரத்தின் நோய் எதிர்ப்பு சக்தி குணக்கூறைப் பிரித்து நோய் தாக்காத ஒரு புதிய ரகத்தை உருவாக்கலாம் என்று அவர் கூறியதை இன்றுள்ள மரபியல் பொறி இயல் செயல்படுத்தி நோய்க்குறியுள்ள வீரிய ரக விதைகளைக் கண்டுபிடித்தனர். அதாவது உயரமாக வளரக்கூடிய ஜீனில் குள்ளரக ஜீனைச் செலுத்தி வைக்கோல் குறைவாகவும், தானிய எடை கூடுதலாகவும் உள்ள நெல், கோதுமை விதைகளை உருவாக்கிய பார்லாக் (Norman Ernest Borlaug) நோபல் பரிசு பெற்றார். வாவிலோவுக்கு மரண தண்டனை கிடைத்தது. பசுமைப்புரட்சியை ஏற்படுத்தியதாக பார்லாக் ஒரு கெட்ட புகழைப் பெற்றுள்ளார். ஜீன் மாற்றம் பற்றிய முதல் குறிப்பு வாவிலோவுடையது அன்றோ!
1921-இல் நியூயார்க் சென்று, அகில உலகத் தாவர நோய்த் தடுப்பு அமைப்பில் இவர் படித்த ஆய்வுரை இவருக்கு உலகப்புகழைத் தேடித்தந்தது. பாரம்பரிய குணமுள்ள, நோய் தாக்காத உணவுத்தாவரங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சுமார் 50 நாடுகளுக்கு விஞ்ஞானப் பயணம் மேற்கொண்டார். சோவியத் ருஷியாவின் உணவு ஆராய்ச்சிக்குப் பாரம்பரிய விதைகளைச் சேகரித்துக் கொடுத்தார். பின்வரும் ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டார்.
1. ஐந்து புவியியல் கண்டங்கள்
2. விவசாய ஆப்கானிஸ்தான்
3. சாகுபடிப்பயிர்களின் மரபியல் பண்பு விநியோகத்தில் புவியியல் விதிகள்
4. டார்வினுக்குப்பின் சாகுபடிப்பயிர்களின் தோற்றம் பற்றிய உண்மைகள்.
கோதுமையின் பூர்வத்தோற்றமான புரோமஸ் புல்விதையை வாவிலோங் சைபிரியாவில் கண்டறிந்தார். மேலும் அவர் அடையாளப் படுத்தியுள்ள ரை(Rye), ஆர்ச்சர்ட் கிராஸ் (orchard grass) போன்றவை உணவு தானியங்களின் பூர்வீகப் பயிர்கள் என்பது இவர் கண்டுபிடிப்பு.[2]
உணவுப்பயிர்களின் தோற்றம், காலம் ஆகியன பற்றிய வாவிலோவின் ஆராய்ச்சியின் விளைவால் 12 அடிப்படைத் தோற்றமையங்கள் புவியியல் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது. 1906-ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த வாவிலோவ் ஒரு ஆய்வாளராக மாஸ்கோ வேளாண்மை இன்ஸ்டிடூயூட்டில் பயின்ற பின்பு 1912-இல் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள விதை ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்தார். 1913-இல் வாவிலோவ் லண்டன் சென்று பேய்ட்ஸன் (W. Bateson) அவர்களுடன் இணைந்து நோய் தாக்காத உணவுத் தாவரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். பேராசிரியர் W.பேய்ட்சன் அவர்கள்தான் தாவரஇயலில் மரபியல்(Genetics) துறையை உருவாக்கியவர். 1917-இல் சாரடோவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1921-இல் நியூயார்க்குக்கு அழைக்கப்பட்டு உரையாற்றினார். 1929-இல் லெனின் இவருக்கு வழங்கிய பெரும்பதவி, வேளாண்மை விஞ்ஞானங்களின் ஒருமித்த அகாடமி முதல் தலைவர். அதாவது First President of Lenin All Union Of Academy of Agricultural Sciences. கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒரு விஞ்ஞானிக்கு வழங்கப்பட்ட இப்பதவியே இவருக்கு எமனாயிற்று.
1935-இல், லிசெங்கோ என்ற சக ‘விஞ்ஞானி’ வாவிலோவ் மீது பொறாமையுற்று, இவர் தேசவிரோத சக்திகளுடன் ஈடுபட்டுள்ளதாக் ஒரு சதிப் புகாரை ஸ்டாலினிடம் வழங்கினார். மென்டல்(Mendel) விதிகளை மீறியதாகவும் புகார். டார்வினை விமர்சித்ததாகப் புகார். இப்புகார்களைத் தீர விசாரிக்காமல் லெனின் ஆதரவாளர் என்ற கண்ணோட்டததை வைத்து ஸ்டாலின் இவருக்கு சைபீரியத் தீவுகளில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஆயுள் தண்டனைக் கைதியாக்கினார். சிறையில் இவர் பட்டினியால் உடல் பலவீனமாகி 1943-இல் மரணமுற்றார். இந்த கோர வரலாற்றில் நம்மை நெகிழவைக்கும் இன்னொரு நிகழ்ச்சி- இவர் சேகரித்துவைத்த விதைகளைக் காப்பாற்றப் பட்டினியால் உயிர் துறந்த பிட்டர்ஸ் பர்க் சகவிஞ்ஞானிகளைக் கூறவேண்டும். இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படைகள் பீட்டர்ஸ்பர்க்கை முற்றுகையிட்டுப் பின் பின்வாங்கிப் போனபோது ஒரு ஜெர்மன் ஜெனரல் வாவிலோவ் விதை வங்கியில் விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் பட்டினியால் உயிர் பிரிந்து சவமாகக் கிடந்ததைப் பார்த்து வியப்பிலாழந்தான்.
”இந்த விதை வங்கியில் உண்பதற்கு நிறையவே கோதுமை, பார்லி உள்ளன. இவற்றைச் சமைத்து உயிர் பிழைத்திருக்கலாமே?” என்று அந்த ஜெனரல் கேட்டபோது, அருகிலிருந்து ஒரு ருஷியச் சிறுவன் இவ்வாறு பதில் கூறினானாம்:
”நாங்கள் மனிதர்கள், ஒருநாள் அழியக்கூடியவர்கள்… ஆனால் விதைகள் சாகாவரம் பெற்றவை. இனி, பிறக்கப்போகும் சந்ததிகளுக்கு நன்மை வழங்கக் கூடியவை…”
இவ்வாறுதான் சேகரித்த பாரம்பர்ய விதைகளைச் சகவிஞ்ஞானிகள் தம் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய உண்மை அறியாமல் சைபீரியச்சிறையில் வாவிலோவ் மரணமுற்றார். இதைப்போல் சோகமான மற்றொன்றைக் கூறவேண்டுமானால் இந்தியாவில் பாரம்பரிய நெல்விதைகளைச் சேகரித்த ரிச்சாரியாவின் மரணம்.
இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட்டதற்குத் தன்னை முதன்மைப் படுத்திக்கொள்ளும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள்தான் வாவிலோவ் விதைக்கதையைச் சொன்னவர். எனினும், இவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளைக்கடத்தி அந்நிய விதை நிறுவனங்களுக்கு விற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. P.P.S.T அமைப்பின் அறிவு ஜீவிகளில் சிலர் ”விதைக்கொள்ளையர்” என்று கூட விமர்சனம் செய்தனர். இதன் பின்னணி என்ன?
1959ல் கட்டக்கில் உள்ள மைய அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக டாக்டர் ஆர்.எச்.ரிக்காரியா(R.H. Richharia) பணிபுரிந்தபோது அதிக விளைச்சல் தரும் பாரம்பர்ய நெல் விதைகளை ஏராளமாகச் சேகரித்து வைத்திருந்தார். பழங்குடி மக்களின் விதைத் தொழில் நுட்பம், விதைப்பு முறை பற்றியும் கள ஆய்வுகள் நிகழ்த்திய உழைப்பாளி. பூச்சி மருந்தோ, ரசாயன உரமோ இல்லாமல் நல்ல விளைச்சல் பெறும் விதைகளும் வைத்திருந்தார். இந்திய நெல் சாகுபடிக்கு அந்நிய ரக விதைகள்-வீரிய ரக விதைகள் தேவை இல்லை என்று கூறினார். இவர் யோசனையை மதிக்காமல், மணிலாவில் உள்ள அனைத்துலக ஆராய்ச்சி நிறுவனத்தில் நெல்லைப் பற்றி எதுவுமே தெரியாத ராபர்ட் சான்ட்லர் என்ற, அங்கு டைராக்டாயிருந்தவரின் பேச்சுக்குச் செவிசாய்த்து, போர்டு அறக்கட்டளையின் தூண்டுதலால் ஐ.ஆர்.8-ம் தைச்சுங் ரகமும் வைரஸ் நோயுடன் விமானம் மூலம் டன் கணக்கில் இறக்கப்பட்டன. வந்திறங்கிய விதை நெல்லுடன் துங்க்ரோவைரஸ், டிராசிட்டர் வைரசும் கூடவே இந்திய மண்ணில் பரப்பட்டது. டாக்டர் ஆர்.எச்.ரிச்சாரியா கூடிய அளவில் வீரியரக நெல் பரவலைத் தடுத்து நிறுத்த முயன்றார். இதனால் எரிச்சலுற்ற மைய வேளாண்மை அமைச்சரகம், கட்டாக் அரிசி ஆராய்ச்சி நிலையத்தையே ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு தாரைவார்க்க முயன்றபோது, இவர் டைரக்டர் என்ற முறையில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டார். ஆகவே, இவருக்குக் கட்டாய ஓய்வு உத்தரவு வந்தது. இதை எதிர்த்து ஒரிசா நீதிமன்றத்தில் வழக்குப்போட்டார். சம்பளம் கிடைக்கவில்லை. வழக்கு 4, 5 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது. ரிச்சாரியா கடனாளியானதுவே மிச்சம். கடன் தொல்லைத்தாங்காமல் மாற்றப்பட்ட இடத்திற்கு உப்புச்சப்பில்லாத ஒரு பதவிக்கு ஒப்புக்கொண்டார்.
இவரின் பதவி இறக்கத்தால், பதவி உயர்ந்தவர் டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன். உண்மையைச் சொல்வதானால் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் நெல்லைப்பற்றி அதிகம் தெரியாது. அவர் படித்தது, ஆராய்ச்சி செய்தவை கோதுமையும், உருளைக்கிழங்கும்தான். அவர் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் சோனா கோதுமை-பார்லாக் கண்டுபிடித்த கோதுமையை இந்திய கோதுமையுடன் கலந்து உருவானது. இதில் எம்.எஸ்.எஸ் அவர்களின் உதவியாளர்களுக்கும் பங்குண்டு. இங்கு அது முக்கியம் இல்லை. டாக்டர் ரிச்சாரியா அமர வேண்டிய I.C.A.R. நிர்வாக இயக்குனர் பதவியை இவர் அலங்கரித்தது, 1966-இல் மனம் உடைந்த டாக்டர் ரிச்சாரியா மாரடைப்பார் மரணமுற்றது, பின்னர் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த நெல் ரகங்கள் மட்டுமல்ல, நம்ம ஊர் ஆற்காடுகிச்சிடி, டொப்பிச்சம்பா, சிறுமணி, வையக்குண்டா, சீரகச்சம்பா உட்பட, பல நூற்றுக்கணக்கான பாரம்பரிய ரக நெல்விதைகள் காணாமல் போய்விட்டன.
ஷாட்சின் மண்ணியல் ஆராய்ச்சியில் லைகன் (Lichen) என்னும் காளான் (fungus) வகை உயிரினத்தின் அற்புதப்பணியைத் தொடர்ந்து எழுதாமல் விஷயம் திசைமாறிச் செல்வதாக எண்ண வேண்டாம். அறிவியல் உலகம் ஷாட்சை ஏமாற்றியதைப்போல் சமகாலத்தில் வஞ்சிக்கப்பட்ட மற்றொரு ருஷியரான வாவிலோவின் நினைவு வந்தது. லைகனைப்பற்றி ஷாட்ஸ் ஆய்வதற்கு வாவிலோவின் பூர்வ இனத்தோற்றப்புவியியல் அட்டவணை உதவியிருக்கலாம். இல்லாவிட்டால் ஷாட்ஸ் ருஷியக்குறிப்பில் உள்ள ஒரு அரிய முலிகையை அடையாளப்படுத்த அர்ஜன்டைனா-ஆண்டஸ் மலைத்தொடரில் அலைந்து திரிந்து கண்டுபிடித்திருக்க முடியாது. நூலிழை அளவில் இருந்த இத்தொடர்வை வைத்து வாவிலோவையும் ஷாட்சையும் நினைக்கும்போது, இந்தியாவிலும் இதுபோன்ற நிகழ்ச்சி ஆர்.எச்.ரிச்சாரியா விஷயத்தில் நிகழந்துள்ளது. இதுவும் என் நினைவலைகளைத் தட்டி எழுப்பியது. ரிச்சாரியாவுக்கும் சேர்த்தே நினைவாஞ்சலி செய்ய வேண்டிய சூழ்நிலையைத் தடுமாறிய என் மன அலைகள் எனது எழுதுகோலில் அடங்காத ஓசையை ஏற்படுத்திவிட்டது. ஹோவார்டு இந்தியப் பாரம்பர்ய உழவியல் நுட்பங்களை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்ற விஷயம் நன்மையானது. ஆனால் ஒரு பிரபல இந்திய வேளாண் விஞ்ஞானி இந்தியாவின் பாரம்பர்ய நெல் விதைகளை அந்நிய சக்திகளுக்கு வழங்கியது உண்மையானால் அது போற்றக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை. அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட இந்திய நெல்ரகங்கள் in Situவாகக் காப்பாற்றப்பட்டு உலகில் எந்த நாட்டிலாவது சாகுபடி செய்யப்பட்டிருந்தால், அதைப்பாராட்டலாம். யாருக்கும் பயனில்லாமல் அமெரிக்க விதை வங்கிகளில் உகந்த குளிர்சாதன வசதியுடன் நைட்ரஜன் நீர்ம ஆவிக்குள் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? இந்திய விவசாய விதைக்குதிர்கள் எல்லாம் உடைத்தெறியப்பட்டுவிட்டனவே. ஒரு காலனி நாடாக இருந்த இந்தியாவிலிருந்து இந்தியச் செல்வங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குக் கொள்ளை போனது சரி. அதை ”ஏகாதிபத்தியச் சுரண்டல்” என்று சொல்லலாம். 20-ம் நூற்றாண்டில் இந்திய விடுதலைக்குப்பின் நிகழ்ந்த விதைக்கொள்ளைக்கு என்ன சொல்லித்திட்டுவது? இதற்கு சரியான சொல்லை அகராதியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இடம் இல்லை.

வேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு

ஆல்பர்ட் ஹாவொர்டின் (Albert Howard) ”வேளாண்மை உயில்” 1940-இல் லண்டனில் அச்சேறியது. பின்னர் ஏழு மறுபதிப்புகள் வெளிவந்து அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் விற்பனையானது. நூல் விற்பனையுடன், ஏராளமான அளவில் மேலைநாட்டு விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவும் தூண்டியது. எனினும் இந்தியாவில் இப்புத்தகம் கிடைக்கவில்லை. எனினும் இந்தியாவில் பெரும்பாலான வாசகர்களுக்கு 1996 வரையில் ஜெராக்ஸ் பிரதிகளே வினியோகமாயின. 1996-ம் ஆண்டில், க்ளோட் ஆல்வாரிஸ் (Claude Alvarez) தனது அதர் இண்டியா பிரஸ் மூலம், மாபுசா, கோவாவிலிருந்து அச்சிட்டு இந்தியப் பதிப்பாக வெளியிட்டார். பின்னர் நான்காண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் மறுபதிப்புகள் அச்சிட்டு வெளியாயின. பென்சில்வேனியாவில் ஜே.ஐ. ரோடேல் எவ்வாறு சோவியத் ருஷிய மண்ணுயிர் ஆய்வுகள், ஹாவொர்ட், ஷாட்ஸ், ஜப்பானிய காந்தி ஃபூகோகா ஆகியொரின் நூல்களை ஆங்கிலத்தில் அன்று வெளியிட்டாரோ அவ்வாறே பல இயற்கை விவசாய இலக்கியங்களை (ஆய்வுக் கட்டுரைகளை) இப்போது க்ளோட் ஆல்வாரிஸ் இந்தியாவில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Albert Howard's An Agricultural Testament

லீபெக் உருவாக்கிய என்.பி.கே ரசாயன உரப்பயன்பாட்டால் மண்ணில் நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் அழிந்து மண்வளம் கெடும் என்றும் ரசாயன உரத்திற்கு ஈடாக மண்ணில் கரிம மக்குகளை அறுவடைக்கழிவும், குணபக்கழிவும் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற போர்க்குரல் இந்தியாவில் எழும்பி, இந்த எதிர்ப்பு இயக்கமே எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு விசுவரூபத்தை எடுத்துவிட்டது.

லீபெக் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இறக்கும் சமயம், தன் தவறை உணர்ந்து மரணவாக்கு மூலம் வழங்கினார். அம்மரணவாக்கு மூலத்தை 1899 -ஆம் ஆண்டு பதிப்பில் ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ வெளியிட்டாலும், மறுபதிப்புகளில் இடம் பெறவில்லை. அவர் வாக்கு மூலம் இதுவே: ”இறைவனின் படைப்புகளுக்கு எதிராக, இறைவனை எதிர்த்து மண்ணுயிரிகளைக் கொன்ற பாவியாக மாறியதால் எனக்கு தண்டனை கிடைத்துவிட்டது. மண்ணில் நுண்ணுயிரிகளைக் கொன்று ரசாயன ஊட்டமே நன்று என்று நான் நவின்றது பாவம். மண்ணுக்கு மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் கொண்ட மக்குதான் இயல்பானது. மண்ணை நோயின்றிக் காப்பாற்றும்….”

விவசாயத்தில் அதிகபட்ச கண்டுமுதல் இயற்கை வழியில் எடுக்க முடியும் என்று அன்றே எடுத்துக்காட்டிய ஹாவொர்ட், எப்படியெல்லாம் சாதனைபுரிந்தார் என்ற நுட்ப விவரங்களை நாம் பின்னர் கவனிக்கும் முன்னர் ஹாவொர்ட் எந்த நோக்கத்தில் தான் படைத்த வேளாண்மைக் காவியத்திற்கு ”வேளாண்மை உயில்” (THE AGRICULTURAL TESTAMENT) என்று பெயரிட்டாரென்ற் விவரத்தை அவர் வாயிலாகவே அறிவது நன்று.

”அன்னை பூமிக்குப் பாஸ் புத்தகம் இல்லை. மண் என்ற மூலதனத்திலிருந்து வெளியேற்றப்படும் வளத்திற்கு வரம்பே இல்லை. தொழில் புரட்சிக்குப் பின் வளர்ச்சியின் வேகம் தீவிரமாயுள்ளது. மக்களுக்கு உணவும் தொழில்களுக்குரிய கச்சாப்பொருள்களும் உற்பத்தி செய்வதில் வேகம் பிறந்துள்ளது. என்.பி.கே பேரூட்டங்களுக்கு உப்பு வடிவில் ரசாயனங்களை வழங்கும் போது இவ்வாறு மண்வளம் சுரண்டப்படுகிறது. இவ்வாறு இழக்கப்பட்ட மண்வளத்திற்கு ஈடு செய்ய எதுவுமே செய்யப்படவில்லை. பயிர்களின் மீது உயிர்க்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. மண்ணில் வளம் கெடுவதுடன் மண் மேலும் நச்சாகிறது. விதைகளின் கருப்பை விஷமானால் விளைவும் விஷந்தானே?

பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த தெளிப்பானைக் கொண்டு நாம் காடுகளில் ‘மருந்து’ அடிப்பதில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் தாவரங்களுக்கும் நோய் வருவதுண்டு. ஆனால் மருத்துவ உதவியின்றி அவை குணமாகின்றன. விலங்குகளும் தாவரங்களும் பூச்சி பூசணங்களிலிருந்து தாமாகவே காப்பாற்றிக் கொள்கின்றனவே. எவ்வாறு? இழந்துவரும் மண்வளம் மீட்கப்படவேண்டும். நவீன விவசாயத்தில் மண்வளம் இழப்பது மட்டுமல்ல. மண்ணில் மக்குப் பொருள் இல்லாததால் மண்ணே அரிப்புகளுக்கு பலியாகிப் பாலையாகிவிடுகிறது. அன்னை பூமியின் கருப்பை பழுதடைந்து வருவதால் இழந்த வளத்தை மீட்பது எப்படி? மண்ணில் உள்ள இயற்கை வளத்தை நிர்வாகம் செய்வது எப்படி? இக்கேள்விகளுக்குரிய விடைகளாக எனது 40 ஆண்டு கால ஆராய்ச்சிகளையும் அனுபவங்களையும் கொண்டு இந்த நூலில் (வேளாண்மை உயில்) உகந்த அறிவுரைகளை வழங்கியுள்ளன. இந்த அனுபவங்கள் இந்தியாவிலும் (பாகிஸ்தான் அடங்கிய பகுதியும் சேர்த்து) மேற்கிந்தியத் தீவுகளிலும், இங்கிலாந்திலும் திரட்டப்பட்டவை”

1905-31 காலகட்டத்தில் இந்திய விவசாயம் பற்றி இவர் கூறியவை பொன்னெழுத்துக்களாகும்:

“பூச்சி பூசாண நோய்களுக்கு, இந்திய விவசாயிகள் விஷமான பூச்சி மருந்துகளைப் பயிர்கள் மீது தெளிக்காமல் பயிர்களைக் காப்பாற்றும் விதம் மிக வியப்பாக இருந்தது. பூச்சிகள் பொருந்தாத பயிர்களை எடுத்துக்காட்டுகின்றன. மாற்றுப் பயிர்களைச்செய்து விடுகிறார்கள். நோயியல் நிபுணர், பூச்சியியல் நிபுணர், பாக்டீரியா நிபுணர், வேதியியல் நிபுணர், புள்ளியியல் நிபுணர், விவசாய நிபுணர், உதவிகள் இல்லாமல் உயர்ந்தபட்ச மகசூலைப் பெறுவதும் வியப்பாகவும் மலைப்பாகவும் இருந்தது. மேற்படி நிபுணத்துவ உதவி இல்லாமலும், ரசாயனஉரம், பூச்சி பூசணக்கொல்லி, கிருமிநாசினி, தெளிப்பான் ஆகியவற்றைப் பயன்படுத்தாமலும் ஆரோக்கியமாகப் பயிர் செய்வது எப்படி? இந்த நுட்பங்களை இந்திய விவசாயிகளிடம் கற்க விரும்பினேன். உழவியல் நுட்பம் இந்திய விவசாயிகளின் ரத்தத்தில் ஊறிப்போயிருந்தது. இந்திய விவசாயிகளுக்கு ரசாயன போதகராக அனுப்பப்பட்ட நான் இங்குள்ள இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல விரும்பினேன்.”

இந்திய விவசாயத்தில் ரசாயன அறிமுகத்தை மிகவும் தாமதப்படுத்தியதில் ஹாவொர்டின் பங்குபோற்றக்கூடியது. இந்தியாவில் ரசாயன உர இறக்குமதிக்கும், பூச்சி மருந்து இறக்கு மதிக்கும் பெரும் தடைக்கல்லாயிருந்த ஹாவொர்ட் ஐரோப்பிய உர நிறுவனர்களின் எதிர்ப்புக்கும், கண்டனத்திற்கும் ஆளானதில் வியப்பில்லை. இவர் கவனிப்பில் இருந்த மத்திய இந்தியாவிலும், வட இந்திய மாநிலங்களிலும் உரத்தொழிற்சாலை தொடங்க யாரும் முன்வரவில்லை. எனினும், இந்தியாவில் முதல் ரசாயன உரத்தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் ராணிப்பேட்டை. இந்திய வேளாண்மை வரலாற்றில் இப்படி ஒரு கெட்ட புகழைத் தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிறுவனம் பாரி அண்ட் கோ. 1906-ஆம் ஆண்டு பாரி அண்ட் கோ, சூப்பர் பாஸ்பேட் உர உற்பத்தியைத் தொடங்கியது. 1941ஆம் ஆண்டு மைசூர் கெமிக்கல் நிறுவனம் அமோனியா உற்பத்தியைத் தொடங்கியது. அதன்பின்னர் கேரள மாநிலத்தில் 1947இல் பொட்டிலைசர் அண்ட கெமிக்கல்ஸ் திருவாங்கூர் (FACT) என்ற உரநிறுவனம் உருவானது. இதில் ஒரு சோகமான நகைச்சுவை எதுவெனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அடங்கிய ”திராவிட நாட்டில்தான்” (பழைய சென்னை மாகாணம்) அந்நிய ரசாயனம் அறிமுகமானது. (”திராவிடம்” என்ற சமஸ்கிருத மொழிச்சொல் உண்மையில் துளுவையும் சேர்த்து ஐந்து தென்னாட்டு மொழிகளின் ஒற்றுமையைக் குறிக்கும். மொழி இலக்கணம் வகுத்த பாணியால் இந்தச் சொல் உருவானது.) ஒருக்கால் திராவிடத்திருநாட்டில் வேளாண்மைப்பணிபுரிய ஹாவொர்டுக்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் இந்த ரசாயன உர நிறுவனங்களை அனுமதித்திருக்கவே மாட்டார்.

இன்றும்கூட, நம்ம ஊர் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் மண்ணை வளப்படுத்தும் வழிகள் பற்றியோ, வளமான மண்ணின் இலக்கணம் பற்றியோ, மண்ணுக்குள் நிகழும் ரசாயனமாற்றம் பற்றியோ, மக்குப்பொருள் முக்கியம் பற்றியோ கற்பிக்கப்படுவதில்லை. ஏனெனில் மண்ணுக்குள் ஏற்படக்கூடிய ரசாயனமாற்றம் செயற்கை ரசாயனங்களால் மட்டுமே நிகழ்வதாக எண்ணப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம். மண்ணுக்குள் ஏற்படும் ரசாயனமாற்றம் இயற்கை இடுபொருள்களால் குறிப்பாக இயற்கை இடுபொருள் மக்காக மாறியபின் எப்போதுமே நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதை முதலில் கண்டறிந்தவர்கள் ருஷிய நாட்டு விஞ்ஞானிகளே. மிச்சம் தொல் சிறப்புள்ள இந்திய வேளாண்மையில் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள் ரிக்வேதம், அதர்வணவேதம், சதபதபிராமணம் போன்ற வைதீக இலக்கியங்களில் உண்டு. இதில் உள்ள குறிப்புகளைக் கொண்டு குணபஜலம் என்ற பயிர் ஊக்கி பற்றி 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விருட்சாயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மண்ணுக்கும் வேரூக்கும் உள்ள ஊட்ட உறவுகளில் தோன்றும் இயல்பான ரசாயன மாற்றம் பற்றிய அறிவியல் நுட்பங்களை ஆராய்ந்து எழுதியவர்கள் ருஷிய விஞ்ஞானிகளே ஆவர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் முக்கியப் பதவியை வகித்த ஆல்பர்ட் ஹாவொர்டுக்கும், ருஷ்ய-அமெரிக்கரும், ஆராய்ச்சி மாணவராகவும், பின் விஞ்ஞானியாகவுமான ஆல்பர்ட் ஷாட்சுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. இன்றைய இந்தியாவில் இயற்கை விவசாயத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு ஐரோப்பிய நாடுகளிலும் இயற்கை விவசாயத்திற்கு ஹாவொர்டு அடிக்கல் நாட்டியது போலவே
ஆல்பர்ட் ஸ்கேட்ஸ்

ஆல்பர்ட் ஷாட்ஸ்

அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தை நிலை நாட்டியதில் ஷாட்ஸுக்குப் பெரும்பங்கு உள்ளது. ஹாவொர்டுக்கும் ஷாட்சுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் ஜே.ஐ.ரோடேல். இவர் ருஷியாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர். இவருடைய தந்தை ரோடேல் மண்ணுக்குள் நுண்ணுயிர்களின் இயக்கம் பற்றிய ருஷிய விஞ்ஞானிகளின் ஆய்வுகளையெல்லாம் ஆங்கிலத்தில் வெளியிட்டுப் பல விஞ்ஞானிகளுக்கு அறிமுகம் வழங்கியவர். ஜார் ருஷியாவிலிருந்து முதல் உலகப்போருக்கு முன்னர் வெளியேறிய ருஷிய-யூத விஞ்ஞானிகளில் பலர் அமெரிக்காவிலும், சிலர் ஆஸ்திரேலியாவிலும் குடியேறினர். அவர்களில் ரொடேல் குடும்பம் ஒன்று. ஷாட்ஸின் தாத்தா அமெரிக்காவில் குடியேறிய ரஷ்ய யூதர். ஆனால் யார் இந்த ஷாட்ஸ்?

டாக்டர் ஆல்பெர்ட் ஷாட்ஸ் (Albert Schatz) தனது 23 ஆவது வயதிலேயே, ’ஸ்ட்ரெப்டோமைசின்” என்னும் ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்துக் கோடானுகோடி (பாட்டாளி) மக்களை டி.பி என்ற காசநோயிலிருந்து, நிச்சய் மரணத்திலிருந்து காப்பாற்றியவர். இக்கண்டுபிடிப்புக்குப்பின் காசநோய் வந்து யாரும் எளிதில் மரணமடைவதில்லை. இம்மருந்தை இவர் கண்டுபிடித்தபோது இவர் ஒரு மாணவர் என்று கூறி ஆராய்ச்சியை மேற்பார்வை செய்த இவருடைய பேராசிரியருக்கு நோபல் பரிசுத் தொகை சென்றது. பல மாதங்கள் இரவும் பகலும் சோதனைக் கூடத்தில் உழைத்து அம்மருந்தைக் கண்டது இவர்தான். அதை இவருடைய பேராசிரியரே துவக்கத்தில் ஒத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதை பெரும் மருந்து நிறுவனங்களிடம் கொடுத்து மக்கள் திரளுக்கென ஒரு மருந்தாக்குவதில் இவரது பேராசிரியர் கவனம் செலுத்தியது உண்மை. அதில் இவருக்கு ப்ங்கு கொடுக்காமல் இவரை ஓரம் கட்டியட்ஹு அப்பேராசிரியரும், பல்கலையின் நிர்வாகமும். அதற்குப் பல காரணங்களிருந்தன. அன்றைய சூழ்நிலையில் ரஷ்யராகவும் யூதராகவும் பார்க்கப் பட்ட ஷாட்ஸுக்கு பல்கலை நிறுவனத்திட்ம் போராட் அதிகம் வலு இல்லை. பிற்பாடு இந்த் மருந்துக்கு நோபல் பரிசு கொடுக்கப் பட்ட் போது இவர் தான் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து வெகு காலம் கழித்தே இவருக்கு உரிய உரிமம் கொடுக்கப்பட்டது. மாண்வராய் இருந்து முடித்துப் பட்டம் வாங்கிய இவர் அன்று தன் கண்டுபிடிப்பு இப்படி யாருக்கோ பெயர் வாங்கிக் கொடுத்ததைக் கண்டு மனம் தளரவில்லை. பல வருடம் போராடிய வண்ணம் இருந்தார். இறுதியில் இவர் பெய்ர் அறிவியல் பதிவேடுகளில் ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆண்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவர் என்று ஒத்துக் கொள்ளப் பட்டு விட்டது. ஸ்ட்ரெப்டோமைசின் மனித நோய்களை மட்டும் தீர்க்கவில்லை. தாவரங்களின் நோய்களையும் தடுக்க, அவற்றைப் பாக்டீரியா, காளான், அல்கே போன்றவை தாக்காமல் தடுக்க ஒரு கொல்லி மருந்தாகத் தெளிக்கப் படுகிறது. ஆப்பிள், சீமைபேரி போன்ற பழமரங்களில் சில நோய்களைத் தடுக்கப் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.

இவர் தாத்தா ஒரு யூதர் என்பதால் அன்றைய ஜார் மன்னரின் சட்டப்படி ஒரு சென்டு நிலம் கூட வாங்க அனுமதி கிட்டவில்லை. ஷாட்ஸின் தாத்தாவுக்கு மண்மீதும், விவசாயத்தின் மீதும் கொள்ள ஆசை. ருஷியாவை விட்டு அமெரிக்காவில் குடியேறி, வடகிழக்குப் பகுதியில் கனெக்டிகட் (Connecticut) மாநில்த்தில், போஸ்ரா என்ற சிற்றூரில் (Bozrah, Connecticu), 140 ஏக்கரில் ஒரு சிறு பண்ணையை உருவாக்கினார். அமெரிக்க அகராதியில் 100 ஏக்கர், 200 ஏக்கர் என்பது ”சிறுபண்ணை”. பிற்காலத்தில் தனது குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த ஷாட்ஸ் அச்சிறு பண்ணையில் தான் கவனித்த விஷயங்களே தன்னை ஒரு ஆய்வாளராகவும், பின்னர் ஒரு முனைவராகவும், முக்கியமான விஞ்ஞானியாகவும் மாறக் காரணமானவை என்கிறார். அவர் கண்டுபிடித்த காளான்கள் எல்லாம் மண்ணில் பெற்றவைதானே! ஷாட்ஸ் அமெரிக்காவில் பிறந்து ஆங்கில வழியே படித்தவராயினும் தாய்மொழி அறிவு அவருக்கு உதவியது. ஏனெனில் மண்ணுயியல்-நுண்ணுயிரியல் பற்றிய பல அன்றைய ஆய்வுக் கட்டுரைகள் ருஷிய மொழியில் எழுதப்பட்டவை. அவற்றை ஷாட்ஸ் ஆழ்ந்து படித்து விரிந்தஅறிவு பெற்றவராக விளங்கினார். அவர் எழுதிய குறிப்புகளை வெளியிட்ட ரோடேலுமே, ருஷிய அறிவியல் நூல் களஞ்சியமாகவும் திகழ்ந்தார்.

கோதுமை அறுவடை செய்யும் ரஷ்ய விவசாயிகள்

கோதுமை அறுவடை செய்யும் ரஷ்ய விவசாயிகள்

ஷாட்ஸ் துவக்கத்தில் பெடாலஜி (Pedology-soil) என்ற துறையில் துவங்கிப் பின் மண்ணுயிரியல் (Pelology) என்ற துறைக்கு நகர்ந்தார். இப்படி ஒரு அறிவியல் துறை இந்தியாவில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. ருஷ்யாவிலிருந்து இத்துறை அமெரிக்கா சென்றது. இத்துறை இன்றும் கிழக்கைரோப்பியப் பல்கலைகளில் பரவலாகக் கற்பிக்கப் படுகிறது. அங்கு பெலாலஜியை ஜியாலஜியின் பங்காகவே (paleo-pedology) பலரும் எண்ணுகின்றனர். அமெரிக்க அறிவியலில் பெலாலஜி அறியப்படுமுன், மண் என்பது பாறையின் துகள்கள் எனவும் ,தாவரங்களின் வேர்களுக்கு மண் ஒரு பாத்திரம் என்ற அளவில் புரிதல் இருந்தது. இதை மாற்றிய வாஸ்ஸிலி வாஸ்ஸிலியெவிச் டொகுசெயெவ் (Vasily Vasilyevich Dokuchaev) என்னும் 19ஆம் நூற்றாண்டின் ம்ண் அறிவியலாளர்- (இவர்தான் ரஷ்யாவின் முதல் மண் அறிவியலாளர் என அறியப்படுகிறார், ஏனெனில் அந்தத் துறையையே இவர்தான் உருவாக்கினார், இவர் முதலில் ஒரு புவியியலாளர்), அமெரிக்க வேளாண்மைத் துறையில் அன்று மண்ணுயிரியல் தலைவராகப் பணிபுரிந்த மார்பட், ”மண்ணியல் துறைக்கு (Geology) சார்லஸ் லையல் எவ்வாறோ, தாவர இயலுக்கு லின்னீயெஸ் (Linnaeus) எவ்வாறோ, அவ்வாறு மண்ணை (உயிர்) நிரம்பியதாகவும், மாறும் தன்மையுடையதாகவும் நிரூபித்துள்ளார்.

டொகுசாயேவ் வாழ்ந்த காலம் 1846-1903. மண்ணைப் பற்றிய முதல் ஆய்வு நூலைப் படைத்தவர். அந்த நூல் ’உலகின் முக்கிய மண் வகைகளும், அவற்றின் வளர்ச்சியும் ’ (’The Great Soil Groups of the World and their Development). இரண்டாவது நூல், ”ருஷியாவின் கரிசல்.” பயிருக்கேற்ற புவிச்சூழல் (The Geographical zones) என்ற கருத்தையும் புனைந்தவர். இந்த நூல்களுடன் இத்துறைக்குரிய காணிக்கையாக ருஷியமொழி பயின்ற ஜூஃபே (Jacob Samuel Joffe), பல்வேறு ருஷிய மண்ணியல் மண்ணியுரியல் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து ஒரு மண் அகராதியை (The ABC of the Soil) எழுதியுள்ளார். அதை வெளியிடக் காரணமானவர் மார்பட். எனினும் ஷாட்ஸ் இத்துறையில் மேற்படி மூலநூல்களைக் கரைத்துக்குடித்தவர். ஷாட்ஸுக்கு நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழம் மண்வேதியியல் துறையியல் பட்டம் வழங்கியது. அதன் பின்னர் மண்நுண்ணியிர்கள் (Soil Microbioloy) துறையில் முனைவர் பட்டமும் வழங்கியது. ஷாட்ஸை ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஊக்கப்படுத்தியவர் ஜேக்கப் லிபமேன் ஆவார். ஜேக்கப் லிப்மேன் அங்கு வேளாண்மைத் துறைத் தலைவராயிருந்தவர். லிப்மேனும் ருஷியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். ருஷிய மொழிப்பற்று இவர்களை ஒன்று சேர்ந்தது. மண்ணுக்குள் இயங்கும் நுண்ணுயிரிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஷாட்ஸ் கவனம் செலுத்திவந்தார். மண் வெறும் ஜடப்பொருள் அல்ல. உயர்மண், மண்ணுயிர் இயக்கம் என்பது பொய்யல்ல என்று கூறியவர். டொகுசாயேவும் லீபெக்கும் சமகாலத்தவர்கள். மண்ணில் உயிர் உண்டு என்று உண்மையைக் கூறியவர் வெளியேற்றப்பட்டதும், மண்ணில் உயிர் இல்லை என்று பொய்யைச் சொன்ன ஜெர்மன் விஞ்ஞானி உள்ளே வந்ததும் வரலாற்றின் சோகம்.

ஷாட்ஸ் தனது 22வது வயதில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அவரது ஆராய்ச்சிப் பணி புளோரிடா ராணுவ மருத்துவமனையில் உள்ள ஒரு பரிசோதனைக்கூடத்தில் வாரம் 40 டாலர் சம்பளத்தில் நிகழந்து வந்தது. இவர் தன்னுடைய சம்பளத்தை வைத்துக் கொண்டுதான் பல்கலைக்கழக ஆராய்ச்சியையும் தொடர வேண்டியிருந்தது. இவர் புளோரிடா ருட்லேண்ட பகுதியில் உள்ள ஆற்றுமண், சேற்றுமண், ஏரிமண், கடல்மண் போன்ற பலவற்றின் மாதிரிகளைச் சோதனைக் கூடத்தில் கொண்டுவந்து அவற்றில் உள்ள நுண்ணியிரிகளைக் கண்டுபிடித்துக் கணக்கிட்டுவந்தார். இப்படிப்பட்ட இளம் வயதில் இவர் ஒருவர் மட்டுமே ரூபர்குனோசிஸ் என்ற காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஆராய அனுமதிபெற்றார். மருத்துவமனைக் கட்டுப்பாட்டுக்கு இணங்க இவருக்குக் கட்டிடத்தின் அடித்தள அறை ஒன்று வழங்கப்பட்டது. ரூபர குளோசிஸ் பாக்டீரியாவைக் கொல்லக்கூடிய எதிர் உயிரியைக் கண்டுபிடித்து அதை ஸ்ட்ரெப்டோமைசின் என்று பெயரிட்டார். ”ஸ்ட்ரப்டோ” என்றால் ”பின்னிப் படர்ந்துள்ள” என்று பொருள். மைசீன் என்றால் காளான். மண்ணில் உள்ள ஒரு காளான் உயிரியும், கோழிக் கொண்டையிலிருந்து எடுக்க்கப்பட்ட ஒரு பாக்டீரியாவும் சேர்ந்து ஸ்ட்ரெப்டோமைசின் உருவாகி அது ரூபர்குளோசிஸ் பாக்டீரியாவை அழிக்கும் உண்மையை இவர் கண்டுபிடிக்க ஓராண்டு உழைத்தார். அந்நிலையில் அவர் ஒரு ஆராய்ச்சி மாணவரே என்று சுட்டிக்காட்டி, இவர் பரிசோதனைக்குக் கூட இருந்து ஒத்துழைத்த ஒரு பேராசிரியருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இவர் வஞ்சிக்ப்பட்டதைப் பற்றி இவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அச்சமயத்தில் ஒரு கொடையாளியாக வாழ்ந்த ஜே.ஜ ரோடேல் ஷாட்சுக்கு ”கம்போஸ்ட் அறிவியல்” என்ற தலைப்பில் வேளாண்மைக்குத் தொடர்பான நுண்ணியிரிகளைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையை வழங்கக்கோரி அதற்கான நிதி உதவியையும் வழங்கினார். சொல்லப்போனால் ஷாட்ஸ், Soil Microbilogy என்ற மண்ணுயிரிகளுடன் மக்கு உருவாக்கம் பற்றி ஆய்வுகளை நிகழ்த்தும் துறையில் ஆர்வத்துடன் இருந்தார்.

ஷாட்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்த மண்நுண்ணுயிர் ஆய்வுகளையும் திரட்டினார். ருஷியா, ஐரோப்பா, அமெரிக்கா போலவே கிழக்கு ஐரோப்பிய முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் மண்ணில் செயற்கை உரம் ஆதிக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தொகுசாயேவை முற்றிலும் புறக்கணிக்கவில்லை. குறிப்பாக செக்கோஸ்லேவியாவில் உள்ள தொகுசாயேவ் மண்ணாராய்ச்சி நிறுவனம், இயற்கை வழி நுண்ணுயிரிகள், மக்கு உரம் பற்றியும் கவனம் செலுத்தியது.

M.M. கோனோநோவா, சோவியத் ரஷ்ய அறிவியல் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் தொகுசாயேவ் மண்ணாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் என்ற முறையிலும், ”மண்ணில் குணபப்பொருள்- மண் உருவாகத்திலும் மண்வளத்திலும் அதன் பங்கு” (Soil organic Matters: its Nature, Its Role in Soil Formation and Fertility) என்ற ஆய்வுத் தொகுப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் கழித்து, ”கரிம மக்குப் பொருளும் அதன் முக்கியத்துவமும்” (Humus and its Significance) என்ற ஆய்வுக் கட்டுரையையும் கோனோ நோவா வெளியிட்டார். ஒவ்வொரு நாட்டிலும் வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தின் ஒரு பகுதியாக மண் ஆராய்ச்சி நிலையங்கள் இருப்பினும் ஹாவொர்ட் கூறியதைப் போலவே ஷாட்சும், ”ரசாயன உர ஊட்டங்களுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவைத்தான் வெளிப்படுத்துகின்றனரே தவிர ஹ்யூமஸ் என்ற கரிம மக்கு ஊட்டம் பற்றிய கவனமோ, ஆய்வுகளோ புறக்கணிக்கப்படுகிறது. மண்ணில் ரசாயனம் பணிபுரிகிறது என்று மண்ணை ஒரு பாத்திரமாக மட்டுமே மதிப்பிட்டு, மண்ணின் வளம் இழக்கப்படுவதை” எடுத்துக்காட்டியுள்ளார்.

மண் என்பது ஒளியாலும் இரவாலும் பாதிக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகளும் உண்டு. உயிரற்றவையும் உண்டு. மண்ணின் பல்வேறு பெளதிக சக்திகளையும் சேர்த்து இவை எவற்றையுமே லீபெக் வகுத்த ரசாயனக் கொள்கை (என்.பி.கே) கணக்கில் கொள்ளவில்லை. இந்தியாவில் கரிம மக்குப் பொருளின் பல்வேறுபெளதிக மாற்றங்களையும் நுண்உயிரிகளின் வலிமையையும் ஹாவொர்ட் ஆராய்ந்ததைப் போலவே, ஷாட்ஸ் அமெரிக்காவில் ஆராய்ந்துள்ளார். ஷாட்ஸ் மருத்துவத்துறையில் கண்டுபிடித்த ஸ்ட்ரெப்டோமைசின் உண்மையில் மண்ணிலிருந்து பெற்ற காளான். இவ்வாறே இவருடைய மற்றொரு கண்டுபிடிப்பு லைகெனின் ஆற்றல் பற்றியது. லைகென் (Lichen) என்பது ஒரு பாசியினம். இது பற்றியும் ருஷிய மண்ணுயிரியல் ஆராய்ந்துள்ளது. இதுவும் வேளாண்மையில் மண்ணில் உள்ள உலோகங்களைக் கரைத்து ஊட்டமாகப் பயிருக்கு வழங்குவதை ஷாட்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார்.

உலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு

மனிதன் பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை இயற்கையில் தானாகவே விளைந்த விதைகள், கனிகள் ஆகியவற்றை உண்டு வாழ்ந்த நாளிலிருந்து 19ஆம் நூற்றாண்டில் வேதியியல் அல்லது ரசாயனங்கள் கண்டுபிடித்த காலம் வரையில் உலகம் முழுவதும் இயற்கை விஞ்ஞானம் நீடித்து வந்தது. புதிய கற்காலத்தில் வேளாண்மையில் மண்ணைப் பண்படுத்தக் கற்கருவிகளும், மரக்கருவிகளும் பயன்பட்டன. பின்னர் உலோகக் காலம் அதாவது பித்தளை – இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு சேகரிப்பிலிருந்து உணவின் உற்பத்தியும், உணவு உற்பத்தியில் உபரி உணவும் சேர்ந்த பிறகு தொழில் – வணிகம் செழித்து உலக நாகரிகங்கள் அரும்பின. கிரீஸ், ரோம், ஆசியா மைனர் என்று சொல்லப்பட்ட துருக்கி, ஈராக், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் புராதன நகரங்கள் தோன்றின. இன்றைய வேளாண்மை சுமார் 10,000 ஆண்டுக்கால வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்கு 19, 20 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சோதனைகள் வேளாண்மையில் அறிமுகமான ரசாயனங்கள் ஆகும். வேளாண்மை என்றால் அது இயற்கை வழி வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மைதான் என்ற இயல்பு மாறி இதில் இரண்டு பிரிவு வந்தது. எவ்வளவுதான் ரசாயனம் வந்தாலும் பாரம்பரிய வேளாண்மையை அதன் இயற்கைத் தன்மையுடன் போற்றிவரும் சிலருடன், ரசாயனத்தைக் கைவிட்டு இயற்கைக்குப் பலர் மாறினாலும் இயற்கை விவசாயம் செய்வோர் சிறுபான்மையினராகவும், ரசாயன விவசாயம் செய்வோர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல; உலகளாவியதாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் இவ்வாறு பெரும்பான்மையான விவசாயிகள் இயற்கை வழியைக் கைவிட்டது ஏன்? இயற்கை விவசாயத்தில் உற்பத்தி குறைவு, மக்கள் தொகை, பசி – பஞ்சம் என்ற காரணங்களும் அல்ல. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்பேச்சுகள் எழுந்தன. எது நிஜம்?




உலகில் மண்ணிலும், விண்ணிலும் ரசாயனத்தை அறிமுகம் செய்யக் காரணமானவர் பேரன் யொஸ்டஸ் வான் லீபெக் (Baron Justus Von Liebig) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். இவர் 1840இல் “வேளாண்மையிலும் உடற்கூறிலும் ரசாயனத்தின் பயன்பாடு” (Chemistry in its Application to Agriculture and Physiology) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.

பல வகையான உணவுத் தாவரங்களை எரித்துப் பற்பமாக்கி அந்தப் பற்பத்தில் (பஸ்பம்) எஞ்சியுள்ள தாதுப்புகளை அளவிட்டு, ஒரு செடி நன்கு வளரச் செயற்கையில் உற்பத்தி செய்த தாது உப்புகளை நீரில் கரைத்து அல்லது ஈர நிலையில் மண்ணில் இட்டுப் பயிரில் ஏற்றலாம் என்று முன்மொழிந்தார்.

மிகவும் அடிப்படையாகப் பயிருக்கு நைட்ரஜன் என்ற தழைச்சத்து, பாஸ்வரம் என்ற மணிச்சத்து, பொட்டாசியம் என்ற சாம்பல் சத்து மிக அதிக அளவிலும், நுண்ணிய அளவில் கால்சியம், கந்தகம், குளோரின், துத்தநாகம், தாமிரம், வெள்ளீயம், பித்தளை, வெங்கலம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவை தேவை என்று அடுக்கிக்கொண்டு போகலாம். பேரூட்டங்களான நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம் கலவையை ஆங்கிலத்தில் சுருக்கமாக, என்.பி.கே (NPK) கலவை என்று ஆங்கிலத்தமிழில் நாம் பேசுவதுண்டு. இந்த என்.பி.கே. கலவையுடன் சிறிது சுண்ணாம்பும் (ஜிப்சம்) சேர்த்து மண்ணில் இட்டுப் பரிசோதித்துப் பார்த்தபோது நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி எதுவுமே யோசிக்காமல் முக்கியமாக வெடிமருந்து தயாரிக்கும் ரசாயன நிறுவன முதலாளிகள் லீபெக்கைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கொண்டாட்டம் போட்டனர். கண்டமேனிக்கு மண்மேல் ரசாயனங்கள் கொட்டப்பட்டன.

சொல்லப்போனால், லீபெக்கின் கண்டுபிடிப்புகளான சூப்பர் பாஸ்பேட், பென்சீன், ஆல்க்கலி போன்றவை போன்றவை வெடிகுண்டுகளுக்குரிய தாதுப்புகள் ஆகும். போரும் அமைதியும் வெடிஉப்பு உற்பத்தியாளர்களை வாழவைத்தன. போர்க் காலங்களில் வெடிகுண்டு வீசுவதால் லாபம். அமைதிக் காலங்களில் அதையே ரசாயன உரங்களாக மண்ணில் இட்டால் கூடுதல் லாபம். ஆனால், மனிதனின் உடல்நலத்திற்கும், உயிர்ச்சூழலுக்கும், பல்லுயிர் வளங்களுக்கும் நஷ்டம். முதல் உலகப்போருக்கு முன்னும் பின்னுமாக செயற்கையான ரசாயன உரப்பயன் மேலை நாடுகளில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்தது.

உலக மக்கள் ரசாயன உரப் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை உடனடியாக உணரவில்லை. எனினும், தீர்க்கதரிசிகளாக வாழ்ந்த புகழ்பெற்ற மருத்துவர்களும், மண்ணுயிர் நிபுணர்களும், நுண்ணுயிர் வல்லுனர்களும் லீபெக்கின் சாம்பல் தத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். லீபெக்கின் அடிப்படையான ஆராய்ச்சியில் உயிருள்ள பசுமைத் தாவரத்தை எரித்துக் கிடைத்த சாம்பலில் உள்ள உப்பை மட்டும் கணக்குப் பண்ணும் இவர் செயலுக்கு “சாம்பல் தத்துவம்” என்று பெயரிட்ட அமெரிக்காவில் மிசௌரி பல்கலைக்கழகப் பேராசிரியர் விலியம் அல்பிரைஹ்டை (Dr. William A. Albrecht) வரலாறு மறந்துவிடாது. (1)

“சாம்பல் என்றாலே அது மரணத்தின் அறிகுறி. லீபெக்கின் தத்துவம் மரணத்தின் தத்துவம்” என்று 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் குரல் கொடுத்த அல்பிரைஹ்டை உலகம் மறந்துவிட்டது. மண்ணியல் பற்றி நுண்ணிய ஆய்வுகள் செய்த பல ருஷ்ய விஞ்ஞானிகளும் புறக்கணிக்கப்பட்டனர். ருஷ்ய விஞ்ஞானிகளின் மண்ணியல் ஆய்வுக் கட்டுரைகள் விலைபோகாமல் இருந்தவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்ட ஜெரோம்.ஐ.ரோடேல் (Jerome Irving Rodale) பிரிட்டிஷ் இந்தியாவில் பணிபுரிந்த மருத்துவர் மக்காரிசன் (Robert McCarrison), வேளாண் விஞ்ஞானி ஆல்பர்ட் ஹாவார்ட் (Dr. Albert Howard), ஜப்பானிய காந்தி ஃபூகோகா (Masanobu Fukuoka) போன்ற பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாய முன்னோடிகள் இந்த சாம்பல் தத்துவம் மண் வளத்தை அழித்துவிடும் என்று எச்சரித்தனர்.

உலகப் போர்களும், உள்நாட்டுப் போர்களும் விளைவித்த பல்வேறு தீமைகளில் வளம் இழந்த வேளாண்மையும் ஒன்று. லீபெக் வளர்த்த என்.பி.கே. என்ற சாம்பல் தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக ருஷ்யாவில் நல்ல விளைச்சலுக்கு ஹ்யூமஸ் (Humus) என்று சொல்லப்படும் மண்ணில் உள்ள மக்குப் பொருள்களே என்ற ஆய்வு முடிவை அங்குள்ள சில விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மூலம் வெளியிட்டனர். அவற்றைப் பின்னர் நாம் கவனிக்கும் முன்பு, மிகவும் தர்க்கரீதியாக லீபெக் தத்துவத்திற்குத் தக்க பதிலை வழங்கியவர் இந்தியாவில் வேளாண்மை ஆய்வுகளை நிகழ்த்திய ஆல்பர்ட் ஹோவார்டே ஆவார்.

0813191718ஆல்பர்ட் ஹாவார்ட் (Albert Howard) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல், வேளாண்மை, மண்ணியல், காளானியல் (Mycology) ஆகிய பாடங்களில் தேர்ச்சியுற்ற பேராசிரியர். இவர் மேற்கிந்தியத் தீவில் பார்படோஸ் நகரில் உள்ள இம்பீரியல் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சரில் ஒரு விரிவுரையாளராக வாழ்வைத் தொடங்கியவர். அங்கு முதலாவதாக லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்த மருத்துவர் மக்காரிசனின் நட்பு கிடைத்தது. ராபர்ட் மக்காரிசன் (Robert McCarrison) புகழ்மிக்க மருத்துவர். இம்பீரியல் இந்திய அரசில் ஊட்டச்சத்து ஆய்வுத்துறைத் தலைவராகவும், நீலகிரி மாவட்டத்தில் கூனூரில் உள்ள லூயி பாஸ்ச்சர் நிறுவனத்தின் தலைவராகவும் முப்பது ஆண்டுக் காலம் பணிபுரிந்ததைப் பாராட்டி பிரிட்டிஷ் மகாராணியிடம் வீரப்பதக்க விருது (Knighthood) பெற்றவர். இவர் சிலகாலம் ஆப்கானிஸ்தானில் ஹுன்சாஸ் பழங்குடி மக்களின் உணவுப் பழக்கவழக்கம், உடற்கூறு பற்றி ஆராய்ந்தவர். ஹுன்சாஸ் பழங்குடிகள் அலெக்சாந்தர் படையெடுப்பின்போது கூடவந்த கிரேக்கப் படைவீரர்கள் மீண்டும் அவருடன் திரும்பாமல் ஆப்கானிஸ்தானில் தங்கி அம்மரபில் வந்தவர்கள். அவர்கள் ஒரு நாளில் 120 மைல் நடக்கக்கூடியவர்கள். 100 வயதுக்குமேல் வாழ்ந்தவர்கள். எந்த வைத்தியமும் செய்துகொள்ளாதவர்கள். குறிப்பாக வயிற்றுநோய், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் ஹுன்சாஸ் மக்களுக்கு வந்தது கிடையாது என்று மக்காரிசனின் மருத்துக் குறிப்பு கூறுகிறது.

“உணவே மருந்து” என்ற குரல் இன்று ஓங்கி ஒலிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல; அன்றைய இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மக்கள் நோய் நொடியில்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான காரணம் பாரம்பரிய உணவு முறை என்பதை மக்காரிசன் பகுத்துரைத்தவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “வயிற்றுப் போக்கு, குடல் நோய்களும் தவறான உணவும்” என்ற தலைப்பில் – அதாவது “Faulty Food in Relation to Gastro Intestinal Disorders” – என்ற பொருள் பற்றி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள உடற்கூறு ஆய்வியல் துறையில் இவர் ஆற்றிய சொற்பொழிவு லீபெக்கின் தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. “வளமான வாழ்வுக்குத் தக்க அளவு ரசாயன ஊட்டங்களை ஏற்க வேண்டும்” என்பது லீபெக்கின் வாதம். ஆனால் சரியான உணவே போதும் என்பது மக்காரிசனின் வாதம். மக்காரிசன் கூறிய அடிப்படையில் இந்தியாவில் வேளாண்மையில் ஆய்வு செய்வதைத் தொடர்ந்தவர் ஹாவர்ட். எனினும், இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் எதுவெனில் இந்தியாவில் மக்காரிசனின் ஆய்வுக் கட்டுரைகளும் அரசாங்க வெளியீடு கோப்புக் குப்பைகளில் புதையுண்டதுபோக, எஞ்சியதிலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் குறைவானவை.

மேற்கிந்தியத் தீவில் பணிபுரிந்த ஹாவார்டின் முக்கியப்பணி அந்த நாட்டின் வர்த்தகப் பயிர்களான கரும்பு, கோகோ, ஜாதிக்காய், ஆரவல்லி என்ற ஆரோரூட் (Arrowroot), பட்டாணி, வாழை, எலுமிச்சை ஆகியவற்றின் சாகுபடியை மேம்படுத்துதலாகும். கரும்புப் பயிருக்கு ஏற்படும் பூஞ்சாண நோய் பற்றியும் ஆராய்ந்து மருந்து வழங்குதலும் ஒன்று. அவர் ஆராய்ச்சி செய்ய சோதனைக்கூடம் இருந்தது. ஆனால் சோதனை வயல் / தோட்டம் வழங்கப்படவில்லை. ஆகவே, அவர் நேரிடையாக விவசாயிகளின் வயல்களுக்குச் சென்று கவனித்துத் தக்க யோசனைகளை வழங்கினார். “சோதனைக்கூடங்களில் சோதனைக் குழாய்களுடன் சங்கமமாகிவிட்டால் அறிவு மழுங்கிவிடும் என்றும், நேரிடையாகக் களத்தில் இறங்கி விவசாயிகளின் நுட்பங்களைக் கவனித்தால் அறிவு வளர்ந்துவிடும்” என்பது அவர் கருத்து.

பயிர்களுக்குரிய நோய்க்குறிகள் மண்ணில் புலப்படுவதை ஹாவார்ட் கண்டறிந்தார். தான் செய்யக்கூடிய ஆராய்ச்சிக்கு விரிந்த அளவில் தோட்டமும் வயலும் வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவருக்கு இந்திய வாய்ப்பு வந்தது. இந்திய விவசாயத்தை மேம்படுத்தவும், இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தி உற்பத்தியை உயர்த்தவேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் தகுதி வாய்ந்த விஞ்ஞானி ஒருவரை பிரிட்டிஷ் இந்தியாவில் அன்று வைஸ்ராயாக இருந்த (Viceroy) கர்சான் (Curzon) தேடிக்கொண்டிருந்தார். தில்லிக்கு அருகில் உள்ள புசாவில் 75 ஏக்கர் நிலத்துடன் இணைந்த வேளாண்மை ஆய்வுக்கூடத்தைக் கர்சான் தொடங்குவதாக இருந்தார். 1905இல் இந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல் வல்லுனர் பதவி ஹாவார்டுக்குக் கிடைத்தது. இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு விரும்பியது. ஹாவார்டோ இந்திய விவசாயத்தில் உற்பத்தியை உயர்த்த ரசாயனம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தியாவிலிருந்துதான் லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்குத் தர்க்கரீதியாகத் தக்க பதிலை ஹாவார்டு இவ்வாறு வழங்கினார்.

லீபெக்கின் தத்துவத்தில் ஒரு பயிர் விளைந்து நல்ல மகசூல் பெறவேண்டுமானால், நன்கு விளைந்த அதே பயிரைச் சுட்டெரித்துப் பின், அந்தச் சாம்பலில் உள்ள தாதுப்புகளை அளவிட்டு அதை மண்ணில் இட்டால் போதுமானது. இரண்டாவது இயற்கை விவசாயிகள் கூறும் மக்குப்பொருள் என்ற ஹ்யூமஸ் முக்கியம் இல்லை. மக்குப்பொருளில் உள்ள கார்பனை மண் மூலம் பெறவேண்டியதில்லை. பச்சை இலைகள் காற்று வடிவில் உள்ள கார்பனை சுவாசித்து ஏற்பதால் மண்ணில் கரிமம் வேண்டும் என்று காத்திருக்காமல் அப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்களை ரசாயன வடிவில் நீரில் கரையக்கூடிய உப்பாக வழங்கவேண்டும் என்று கூறுவதோடு நிற்காமல் ஹ்யூமஸ் மக்குப்பொருள் என்ற கரிமச்சத்து தண்ணீரில் கரையாது என்றும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்கு எஞ்சுகிறது என்ற உண்மையையும் பொய்யென்று லீபெக் வாதிட்டார்.

வேளாண்மை வேதியியல் (Agriculture Chemistry) என்ற துறையில் லீபெக்கின் பங்கைப் பாராட்டிய ஹாவார்ட் முதல் நிலையை ஏற்றுக்கொண்டாலும், இரண்டாவது நிலை மிகவும் தவறு என்று கூறினார். ஒரு தாவரத்திற்குத் தேவையான ஊட்டத்தை உப்பு வடிவில் வழங்கும் செயல் மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் பாதிக்கும் என்று நிரூபித்தார். லீபெக்கைப் பற்றி அன்று ஹாவார்டு கூறிய ஒரு கருத்து இந்தியாவில் ஏட்டுச் சுரக்காய்களாக வாழும் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. பயிர் வளர்ச்சிக்கு மக்குப்பொருளான ஹ்யூமஸ் தேவையில்லை என்று கூறுவதும், சோதனைக்கூட முடிவே இறுதியான முடிவு என்பதும், உழவியல் நுட்ப அறிவோ, வேளாண்மை அனுபவ அறிவோ லீபெக்கிடம் இல்லை என்று எடுத்துக்காட்டுகிறது என்று ஹாவார்ட் கூறுகிறார். விவசாய வளர்ச்சிக்கு சோதனைக்கூட அறிவு வயலுக்குச் செல்லவேண்டும் என்பதைவிட வயலில் அனுபவ அடிப்படையில் விவசாயிகளின் பாரம்பரிய அறிவு சோதனைக்கூடத்தை அடையவேண்டும் என்பது மிக முக்கியம் என்று ஹாவார்ட் கருதுகிறார். ஒரு தாவரத்திற்கு வேண்டிய அவ்வளவு தாதுப்புச் சத்துகளும் மண்ணில் உண்டு என்றும், உண்மையில் மக்குச்சத்து என்ற ஹுமஸ் மண்ணில் கரைந்து உலோக உப்புச்சத்துகளை நுண்ணிய வழியில் கரைத்து வேர் உறிஞ்சிகளுக்கு எடுத்துக்கொடுக்க நுண்ணியிரிகள் உதவுகின்றன என்பதால், ஹ்யூமஸ் என்ற மக்குப்பொருள் நீரில் கரையாது என்பதும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்குப்பொருள் எஞ்சாது என்பதும் நிரூபிக்கப்படாதவை என்று கூறும் ஹாவார்ட், அனுபவபூர்வமாக லீபெக்கின் தத்துவத்தையும் பொய்யென்று நிரூபித்துக் காட்டிவிட்டார்.

ஏறத்தாழ 30 ஆண்டுக்காலம் இந்திய விவசாயிகளோடு நெருங்கிப் பழகிய ஹாவார்ட் ஏராளமான பாரம்பரிய உழவியல் நுட்பங்களைப் பயின்று மெருகேற்றி விவசாயிகளுக்குத் திரும்பி வழங்கினார். மக்குப்பொருளில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆற்றல், மண்ணில் உள்ள உயிரியல் ரசாயனங்கள் குறித்து இவர் முப்பதாண்டுக் காலம் நிகழ்த்திய ஆய்வு முடிவில் இவர் வரைந்த சொல்சித்திரம் “வேளாண்மை உயில்”. இதைப் பற்றியும் 1935க்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் இந்திய உழவியல் நுட்பங்களைக்கொண்டு இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட விவரங்களுடன் 1905இலிருந்து 1935 வரை இவர் நிகழ்த்திய ஆய்வுகள் பற்றியும், சமகால் ருஷிய வழங்கல் பற்றியும் இனிவரும் இதழ்களில் கவனிக்கும் முன்பு, லீபெக்கின் பெருந்தன்மை பற்றியும் ஒரு வரி எழுதலாம். “மண்ணில் ரசாயன உரங்களை இடுவது மண் வளத்தைக் கெடுத்துவிடும்’, என்றும், ’பயிர் ஆரோக்கியமாக வளர ஹ்யூமஸ் என்ற மக்கு அவசியமே” என்று லீபெக் ஒரு மரண வாக்குமூலம் வழங்கினாலும்கூட அது காலம் கடந்து வந்து விட்டது. ரசாயன உர உற்பத்தி நிறுவனங்களின் பணப் பசிக்கு மண் இரையானது. இது உலகளாவியதாக இருந்தது.